Tuesday, July 31, 2012

நீத்தார் பெருமை

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.  - 21

தி.பொ.ச. உரை:  இவ் உலகில் ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறந்த பெரியோர்களின் பெருமையைச் சிறப்பிப்பதே அறநூல்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
=================================================

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  -  22

தி.பொ.ச. உரை: உலகியல் இன்பங்களைத் துறந்த பெரியோர்களின் பெருமை எவ்வளவு என்றால் இவ் உலகில் இறந்துபட்ட மாந்தர்களின் எண்ணிக்கை அளவேயாகும். ( அளவற்றது என்பதே பொருள்).
================================================

    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.  - 23

தி.பொ.ச.உரை: இம்மை, மறுமை என்ற இரண்டின் தன்மை அறிந்து இவ் உலகில் அறம் செய்வோரின் பெருமையால் தான் இவ் உலகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
================================================

    உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வறனென்னும் வைப்பிற்கோர் வித்து.  - 24

தி.பொ.ச. உரை: மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமன்
    ஐந்திரனே சாலுங் கரி.    -  25

தி.பொ.ச. உரை: ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான்.  ( ஆய்வுக் கட்டுரை)
====================================================

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்.    -  26

தி.பொ.ச. உரை: ஐம்புலன் வென்ற பெரியோரே செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவராம். அவரல்லாத சிறியோரால் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமுடியாது..
:====================================================

    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.   -  27

தி.பொ.ச. உரை: சுவை, ஒளி, தொடுகை, ஒலி, மணம் என்ற ஐவகை புலனுணர்வுகள் செய்யும்  தந்திரங்களை ஆராய்ந்து அறியவல்லவனே இவ் உலகினைக் கட்டுப்படுத்த வல்லவன் ஆவான்.
====================================================

    நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து
    மறைமொழி காட்டி விடும்.  -  28

தி.பொ.ச. உரை: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.  ( ஆய்வுக் கட்டுரை)
===================================================

    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காண்டல் அரிது.   -  29

தி.பொ.ச. உரை: குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும். ( ஆய்வுக் கட்டுரை)
=====================================================

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.    - 30

தி.பொ.ச. உரை: எல்லா மக்களிடத்திலும் வேறுபாடின்றி அன்பு பூண்டு பசியாற்றுவதால் தான் வேளாண் மக்களும் அறவோராகக் கருதப்படுகின்றனர். ( இக் குறள் இந்த அதிகாரத்தில் தவறாக வைக்கப்பட்டுள்ளது. அதற்கு இக் குறளின் பொருளே போதுமான சான்றாகும்.)
====================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.