Thursday, August 2, 2012

அறன் வலியுறுத்தல்

    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு. - 31

தி.பொ.ச. உரை: புகழையும் செல்வத்தையும் பயனாகத் தரும்போது அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு வேறு என்ன நற்செயல் இருக்க முடியும்?.
==============================================

    அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு. - 32

தி.பொ.ச.உரை: அறம் செய்வதைக் காட்டிலும் ஒருவனுக்கு நற்செயல் வேறில்லை. அறம்செய்ய மறப்பதைக் காட்டிலும் ஒருவனுக்கு தீச்செயல் வேறில்லை.
==================================================

    ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல். - 33

தி.பொ.ச. உரை: தமக்குப் பொருத்தமான முறையில் செய்யத்தக்க இடங்களில் எல்லாம் அறச்செயலை தவிர்க்காமல் செய்க.
=================================================

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.   - 34

தி.பொ.ச. உரை: ஒருவன் தன் மனதளவில் களங்கமற்றவனாக இருப்பது அனைத்து அறத்திற்கும் இன்றியமையாதது. ஏனென்றால்  களங்கத்துடன் செய்யும் செயல்கள் எவையும் வெற்று ஆரவாரம் போன்றது. ( அறச்செயலைப் போல இவை புகழும் செல்வமும் தராது.)
===================================================

    அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.  -  35

தி.பொ.ச. உரை: பொறாமை, ஆசை, சினம், இழிசொல் ஆகிய நான்கினையும் தீயவை என்று அறம் கூறுகிறது.
================================================

    அன்றளிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

தி.பொ.ச. உரை: தமது தேவைக்கு மேல் பொருள் சேரும்போது பிறருக்குக் கொடுத்து உதவுவோம் என்று கருதாமல் இப்போதே அறம் செய்யுங்கள். சேர்த்த பொருள் செலவழிந்தாலும் செய்த உதவியானது அழியாமல் துணையாய் நின்று காக்கும்.
===============================================

    அறத்தாறு இதுவென வேண்டா செவிகைப்பப்
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

தி.பொ.ச.உரை: காதுகள் கசக்கும்படியான கடுஞ்சொற்களைக் கேட்டுப் பொறுத்திருப்பவனுக்கும் அவன் மேல்சென்ற (வன்சொற்களால் அடக்குமுறை புரிந்த) வனுக்கும் இடையே சென்று 'அறச்செயலே இது' எனக் கூறவேண்டா. (எவ்வகையானும் இது அறச்செயல் ஆகாது.)".   ( ஆய்வுக் கட்டுரை)
=====================================================

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் பழியடைக்கும் கல்.   -  38

தி.பொ.ச. உரை: (செய்யாது) ஒழிந்த நாள் தோன்றாவண்ணம் ஒருவன் அறஞ்செய்து வந்தால் அதுவே அவனது வாழ்நாளில் அவன்மீது பழியேதும் தோன்றாவண்ணம் (பாவக்குழியை) அடைத்துநிற்கும் கல்லாகும்.
=====================================================

    அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
    புறத்த புகழும் இல. -  39

தி.பொ.ச. உரை: இன்பம் எனப்படுவதெல்லாம் அறச்செயல்களால் வருவதேயாகும். அறமற்ற செயல்களில் இன்பமோ புகழோ கிடைப்பதில்லை.
======================================================

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.   -  40

தி.பொ.ச. உரை: ஒருவன் செய்யத்தக்கதெல்லாம் ( புகழ், செல்வம், இன்பம் என்ற மூன்றையும் தருகின்ற) அறச்செயல்களேயாம். செய்யாமல் தவிர்க்க வேண்டியவையெல்லாம் பழியை மட்டுமே தருகின்ற அறமில்லாத செயல்களேயாம்.
=====================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.