Monday, August 13, 2012

புதல்வரைப் பெறுதல்

    பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.   -   61

தி.பொ.ச. உரை: மக்களின் பண்பட்ட அறிவினால் கிடைக்கின்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் மக்களால் பெற்றோர் அடையத்தக்க பெரும்பேறு வேறொன்றை யான் அறியேன்.
==================================================

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.      -   62

தி.பொ.ச. உரை: மக்கள் பண்புடையவராய் இருப்பின், பெற்றோருக்கு ஒரு நாளும் துன்பங்கள் இல்லை; பழிச்சொல்லும் இல்லை. ( குறள் எண் 339 ன் படி, உறங்கி எழுகின்ற ஒவ்வொரு நாளையும் வள்ளுவர் ஒரு பிறப்பாகக் கருதுவதால், இங்கு எழுபிறப்பு என்ற சொல்லின் மூலம் நாள்தோறும் என்ற பொருளைக் குறித்தார் என்க.)
==============================================

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தம்தம் வினையான் வரும்.   -  63

தி.பொ.ச. உரை: தம் மக்களையே தமது செல்வங்கள் என்று கூறி மகிழ்வர் பெற்றோர். (ஆனால் அம் மக்கள் உண்மையிலேயே) அவர்களுக்குச் செல்வங்களாவது அம் மக்கள் செய்யும் செயல்களைப் பொறுத்தே அமைகின்றது. 
==============================================

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்.      -  64

தி.பொ.ச. உரை: மக்கள் தமது கையினால் கொடுத்தது சிறிதளவு கூழானாலும் அது அமிர்தத்தினை விட மிகவும் இனிமையாக இருந்தது என்று மகிழ்வர் பெற்றோர்.
===============================================

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.    -  65

தி.பொ.ச. உரை: தம் உடலை மக்கள் தழுவும்போது இன்புறுவர் பெற்றோர். (தழுவியவாறே) மக்கள் பேசும்போது அதைக்கேட்டு இன்னும் மகிழ்வர் பெற்றோர். 
==============================================

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.   -   66

தி.பொ.ச. உரை: மக்கள் பேசும்போது அதைக்கேட்டு மகிழும் பெற்றோர் அது புல்லாங்குழலை விடவும் யாழினை விடவும் இனிமையானது என்பர்.
============================================

    தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.   -  67

தி.பொ.ச.உரை: தந்தை தன் மக்கட்கு செய்யும் நற்செயல் யாதெனில், தன் மக்களை கல்விநிலையங்களில் (காலம் தாழ்த்தாமல்) முன்னரே சேர்த்து விடுதலாகும்.
==============================================

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   - 68

தி.பொ.ச. உரை: பெற்றோர், தம்மைக் காட்டிலும் தம் மக்களை கல்வியில் மேம்படச் செய்தலொன்றே உலக உயிர்கள் மகிழ்வுடன் வாழ வழிசெய்யும்.  
===============================================

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.   -  69

தி.பொ.ச. உரை: தன் மகனை முதன்முதலில் 'காணும்போது' மகிழ்கிறாள் தாய். அவனை அறிஞன் எனப் பிறர் கூறக் 'கேட்கும்போதோ' இன்னும் மகிழ்கிறாள் தாய்.
==================================================

    மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல்.    -   70

தி.பொ.ச. உரை: (தன்னைக் கல்வியறிவு பெறச்செய்த) தந்தைக்கு ஒரு மகன் உதவிசெய்ய விரும்பினால், ' இவனை மகனாகப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ' என்று பிறர் போற்றும் அளவுக்குப் பண்பட்ட அறிவுடன் நடந்து கொள்ள வேண்டும். 
==================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.