Friday, August 3, 2012

இல்வாழ்க்கை

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.       - 41

தி.பொ.ச. உரை: மூன்றுவகைப்பட்ட இயல்புடையவர்க்கும் இல்லறத்தில் வாழ்பவனே நல்வழியில் நின்று காக்கின்ற துணையாவான். ( இந்த மூவர் யார் என்று அடுத்த குறளில் கூறுகிறார்.)
=================================================

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான்  என்பான் துணை.    -  42

தி.பொ.ச.உரை: மனைவி, குழந்தைகள், பெற்றோர் என்ற மூவகையினருக்கும் இல்லறத்தில் வாழ்பவனே காக்கின்ற துணையாவான். ( பெற்ற தாய்தந்தையரையும் உடன்பிறந்தோரையும் இன்னும் பலவற்றையும் துறந்து கணவனது இல்லமே கதியென வருவதால் இங்கு மனைவியை 'துறந்தார்' என்றார். அனுபவமற்றவரும் வலிமையற்றவருமான குழந்தைகளை 'துவ்வாதவர்' என்றார். இளமை கழிந்தோரும் அகவை மிக்கோருமாகிய தாய் தந்தையரை இறந்தார் என்றார்.)
================================================

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.    -  43

தி.பொ.ச.உரை: புலனின்பம் நீத்தார், பசு, விருந்தினர், சுற்றம், தனது குடும்பம் என்ற ஐவகையினரையும் அறநெறியின்படி பாதுகாப்பதே இல்வாழ்வானின் தலையாய கடமையாகும்.  ( ஆய்வுக் கட்டுரை)
===============================================

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

தி.பொ.ச. உரை: பழிக்கு அஞ்சி சேர்த்த பொருள் சிறிதாயினும் அதையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனுக்கு வாழ்வில் ஒரு குறைபாடும் ஒருபோதும் இருப்பதில்லை.
=====================================================

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.       -  45

தி.பொ.ச. உரை: அனைவரிடமும் அன்பு கொண்டு ஒழுகுவதே இல்வாழ்க்கையின் பண்பாகும். அறச் செயல்கள் புரிவதே இல்வாழ்க்கை பெற்ற பயனாகும். 
================================================

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்.     -  46

தி.பொ.ச.உரை:  அறநெறியின்படி இல்வாழ்க்கை நடத்தி இன்பம் பெறுதலைவிட பிறநெறியில் சென்று என்ன பெறமுடியும்?.
( ஒன்றும் பெற முடியாது .)
================================================

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.    -  47

தி.பொ.ச. உரை: அறநெறியின்படி பொருளீட்டி இல்வாழ்க்கை நடத்துபவன் எவனோ அவனே பிறநெறியில் சென்று பொருள் ஈட்டுவோரைவிட  தலைசிறந்தவனாவான்.
=====================================================

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.   -  48

தி.பொ.ச. உரை: அறநெறியில் இருந்து வழுவாமல் நடத்தப்படும் இல்லறமானது வலிமையானதாகக் கருதப்படும் துறவறத்தைக் காட்டிலும் வலிமை மிக்கதாகும்.
======================================================

    அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.   - 49

தி.பொ.ச. உரை: அறம் என்று பொதுவாகக் கூறப்படுவது இல்லறமே ஆகும். இதில் பிறரால் வரும் பழி இல்லாதிருந்தால் அதுவே நல்லறமாகும்.  . .
========================================================

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.   -  50

தி.பொ.ச. உரை: இவ் உலகில் அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்பவன் அமிர்தமாகிய பாலுறையும் பசுவிற்கு ஒப்பாகக் கருதப்படுவான்.   ( ஆய்வுக் கட்டுரை)
=======================================================

1 comment:

  1. தங்களுடைய ஐம்பதாவது குறள் ஆய்வுக் கட்டுரை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

    வான் உறை தெய்வத்துள் வைக்கப்படும் என்று வள்ளுவர் தெளிவாக குறிப்பிட்டு விட்டாரே அதில் தங்களுக்கு நேர்ந்த குழப்பம் என்னவோ ?

    வாழ்க வளமுடன் அருட் தொண்டன் பிரகாஷ் ராமானுஜம் சென்னை ஆவடி அறிவு திருக்கோவில் சென்னை.

    ReplyDelete

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.