Thursday, August 9, 2012

வாழ்க்கைத் துணைநலம்

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.   -  51

தி.பொ.ச. உரை: புகுந்த வீட்டிற்கேற்ப தனது குணங்களை மாற்றிக்கொண்டு தனது கணவனின் வருமானத்திற்கேற்ப செலவு செய்பவளே சிறந்த வாழ்க்கைத் துணையாவாள். 
=====================================================

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.   -  52

தி.பொ.ச. உரை: இல்லறத்திற்கேற்ற சிறந்த பண்புகள் ஒருவனது மனைவியிடம் இல்லையானால், அவனது இல்வாழ்க்கை வேறு எவ்வகையிலும் சிறப்புடையது ஆகாது.
===================================================

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை?.  -  53

தி.பொ.ச. உரை: நல்ல மனைவி இருந்தால் வாழ்க்கையில் எல்லா இன்பங்களும் இருக்கும். இல்லாவிட்டால் அங்கு துன்பங்களே இருக்கும்.
================================================

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்.   -  54

தி.பொ.ச. உரை: தனது இல்லறக் கடமைகளை அறநெறி வழுவாமல் செய்வதாகிய கற்பு எனப்படும் கொள்கையினைக் காட்டிலும் ஒரு மனைவிக்கு பெருமை சேர்ப்பது எது உள்ளது? ( எதுவுமில்லை)
=================================================

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யு மிழை.  -  55

தி.பொ.ச. உரை: பசுவினைக் கூட பேணாதவளாய் தனது கணவனையே பேணி (தனது கடமைகளைத்) தொடங்கும் மனைவியானவள் (கணவன் கொணர்ந்து தந்து) 'அணிக' என்று கூற அணிகலனை அணிந்துகொள்வாள்.'  (ஆய்வுக் கட்டுரை)
===================================================

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.  -  56

தி.பொ.ச. உரை: நாவடக்கத்தால் தன்னைக் காத்தல், தனது கணவனின் சொல்லைப் பேணுதல், தகைசான்ற பெரியோரின் அறிவுரைகளைக் காத்தல் ஆகிய இவற்றில் சிறிதும் தளராதவளே சிறந்த மனைவியாவாள்.
====================================================

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை.   - 57

தி.பொ.ச. உரை: மனைவியானவள் தனது இல்லத்தைக் காவல் காப்பதைக் காட்டிலும் தனது உள்ளத்தை (ஆசைகளை)க் காவல் காப்பதே தலையாய செயலாகும்.
===================================================

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு.   -  58

தி.பொ.ச. உரை: மனைவியானவள் தனது கற்புநெறியினால் புகழ் பெற்றால் அப்புகழினைக் கொண்டு பெருஞ்சிறப்புடையதாகக் கருதப்படும் புத்தேளிர் உலகினையே பெற முடியும்.
===================================================

    புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.     -  59

தி.பொ.ச. உரை: (கற்புநெறியால்) புகழ் சான்ற மனைவி இல்லாத ஒரு ஆண்மகன், (போரிலே) தனது பகைவர்களை, ஒரு ஆண்சிங்கத்தைப் போல கம்பீரத்துடன் எதிர்கொள்ளமுடியாது. ( இதனால் மனைமாட்சியற்ற மனைவியால் ஒரு ஆடவனின் நிம்மதி மட்டுமின்றி வீரமும் பாதிக்கப்படும் என்றார்.)
==================================================

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு.   - 60

தி.பொ.ச. உரை:

மனைவியைத் தங்கம் என்று சொல்வார்கள். அந்த மனைவி மூலம் நல்ல குழந்தைகளை பெற்றுக் கொள்வது தங்கத்தில் நல்ல அணிகலன்களைச் செய்வதைப் போன்றதாகும்.
===============================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.