Saturday, December 15, 2012

இனியவை கூறல்


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.   -   91

தி.பொ.ச.உரை: செம்பொருளாகிய அறத்தின் தன்மைகளைத் தெளிவாக அறிந்தவர்கள்  தீங்கில்லாத அறக் கருத்துக்களையே பேசுமிடத்தும் அன்பு கலந்து இனிமையாகவே கூறுவர்.
==========================================================

அகன்அமர்ந்து ஈதலில் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.  - 92

தி.பொ.ச.உரை: இல்லத்திற்குள் அழைத்து அமரவைத்து உணவிடுவதற்கு தன்னிடத்திலே ஒரு பொருளுமில்லை ஆயினும் தம் இல்லத்தின் முன்னால் இருந்துகொண்டு வரும் விருந்தினர்களின் மனம் கோணாதவாறு முகமலர்ந்து இனிமையாகப் பேசி வழியனுப்புவதும் நற்செயலே ஆகும்.
==========================================================

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். - 93

தி.பொ.ச.உரை: (விருந்தினர்களிடத்தில்) முகம் மலர்ந்து கருணையோடு பார்ப்பதும் அகம் மலர்ந்து அன்பொழுக இனிய சொற்களைப் பேசுவதும் அறச்செயலே ஆகும். ( இன்சொலினதும் என்பதற்குப் பதிலாக இன்சொலினதே என்று வந்துள்ளது.)
=========================================================

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  - 94

தி.பொ.ச. உரை: யாவர்க்கும் இன்பம் தரும் இனிய சொற்களையே எப்போதும் பேசி வாழ்வோரின் வாழ்க்கையில் துன்பம் தருவதான வறுமை என்பது வருவதில்லை. ( துவ்வாமை என்பதற்கு அனுபவமின்மை (நுகராமை), வேண்டாமை, வறுமை என்ற பொருட்கள் உண்டு. இவற்றுள் துன்பம் தரும் இயல்புடையது வறுமை மட்டுமே. அதனான் துன்புறூஉம் துவ்வாமை என்பது ஈண்டு வறுமையையே குறித்தது என்க. தாம் மட்டும் மகிழாது தம்மை அண்டி வரும் அனைவரையும் மகிழ்விக்கும் பண்பினால் இம் மக்கள் மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழ்வார்கள் என்கிறார் வள்ளுவர்.)
========================================================

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.      -  95

தி.பொ.ச. உரை: நுகர்பொருள் அனைத்தும் உடையவனாய் ஒருவன் இருந்தாலும் அவனுக்குப் பெருமையும் புகழும் சேர்ப்பது அவனது இனிமையாகப் பேசும் பண்பே ஒழிய வேறில்லை. ( இக் குறளில் வரும் பணி என்பது நுகர்பொருளைக் குறிக்கும்.)
========================================================

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.    -  96

தி.பொ.ச. உரை: நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து இனிமையாகப் பேசிப் பழகி வந்தால் மனதிலுள்ள அறியாமை அழிந்து நல்லறிவு உண்டாகும். ( இன்சொல் பேசுவதால் உண்டாகும் பயன் இதனானும் உணர்த்தப்பட்டது.)
=======================================================

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.   -  97

தி.பொ.ச.உரை: பிறரிடத்து இனிமையுடன் பேசப்படும் சொற்கள் அவருடனான உறவினை மேம்படுத்துவதுடன் அவருக்கு நன்மையினையும் அளித்து அதனால் தமக்கு செய்ந்நன்றியினையும் அளிக்க வல்லதாம். ( இக்குறளில் வரும் நயன் என்பது உறவினையும் நன்றி என்பது செய்ந்நன்றியினையும் குறிக்கும்.)
======================================================

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.    -  98

தி.பொ.ச. உரை: வறுமை நிலையில் இருந்தாலும் ஒருவன் குற்றம் நீங்கிய இனிய சொற்களை பேசிவந்தால் அவனது இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் இன்பம் உண்டாகும். ( இங்கு சிறுமை என்பது வறுமையினைக் குறிக்கும். இம்மை என்பது பிறப்பு முதல் 60 ஆண்டுகள் வரையிலான இல்லற வாழ்க்கை. மறுமை என்பது 60 க்கு மேல் வாழும் துறவற வாழ்க்கை.)
======================================================

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.    -  99

தி.பொ.ச.உரை: இனிய சொற்களைப் பேசியபோது நன்மை விளைந்ததை நேரடியாகக் கண்டும் பின்பொரு சமயம் கொடிய சொற்களை ஒருவன் பேசுவது எதனாலோ?.
======================================================

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காழ்கவர்ந் தற்று.   -  100

தி.பொ.ச.உரை: இனிய சொற்கள் இருக்கும்போது அதைவிடுத்து கடுஞ்சொற்களை ஒருவன் பயன்படுத்தும் செயலானது பழுத்த இனிய பழத்தைத் தின்னாமல் அதனுள் இருக்கும் கசப்பான கடினமான கொட்டையினை தின்கின்ற அறிவற்ற செயலுக்கு ஒப்பாகும்.
(ஆய்வுக்கட்டுரை)
======================================================

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.