Thursday, October 24, 2013

நடுவுநிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.  -  111

தி.பொ.ச. உரை: வேறுபாடுகளின் நடுவாக நின்று செயல்படும் ஆற்றலை ஒருவர் பெற்றிருப்பின் அதுவொன்றே அவருக்கு நல்ல தகுதி எனப்படும். ( இங்கு வேறுபாடுகள் என்பது தன்குடும்பம், உறவினர், நண்பர், பகைவர் போன்ற உறவுமுறை வேறுபாடுகளையும் ஏழை, பணக்காரன் போன்ற பொருளாதார நிலை வேறுபாடுகளையும் இன்னபிற வேறுபாடுகளையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த வேறுபாடுகளின் ஒருபக்கமாக சாய்ந்துவிடாமல் நடுவாக நின்று செயலாற்றுவதே ஒரு நல்ல மனிதருக்கான சிறந்த தகுதி என்கிறார். இன் என்னும் வேற்றுமை உருபுக்கு பதிலாக ஆல் என்னும் உருபு மயங்கி வந்துள்ளது. பகுதி = வேறுபாடு. பால் = நடு, மையம். பால்படுதல் = நடுவுநிற்றல். அகராதி காண்க.)
=======================================================

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.  -  112

தி.பொ.ச. உரை: நேர்மையாக வாழும் ஒருவருடைய செயல்கள் (அவர் மறைந்தாலும் தாம்) அழியாமல் நின்று அவரது பரம்பரையையும் காத்து நிற்கும். ( இது எவ்வாறெனின், ஒருவரது நேர்மையால் மகிழ்ச்சியாக வாழ்ந்தோர் அவரது பரம்பரையினர் துன்புற்றவுழிக் கைவிடாமல் காத்து நிற்பர் என்பதாம். ஆக்கம் = செயல். )   
======================================================

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.  - 113

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற செயலினால் ஒருவருக்கு நல்ல பொருளும் நல்ல பெயரும் கிடைப்பதாகவே இருந்தாலும் அச் செயலை அப்பொழுதே கைவிடல் வேண்டும். ( ஏனென்றால் அப்படிக் கிடைத்த செல்வமும் பெயரும் நீண்ட நாள் நிலைத்து நிற்காது என்பதுடன் தனக்குப்பின் தனது பரம்பரையினையே அது பாதிக்கும் என்பதால். ஆக்கம் = செயல். )
=======================================================

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.  -  114

தி.பொ.ச. உரை: ஒருவர் நேர்மையானவராய் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அவரது பரம்பரையினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ( ஆம், குறள் 112 ல் கூறியபடி, நேர்மையோடு ஒருவர் வாழ்ந்திருந்தால் அது அவரது பரம்பரையை எளிமையாக வாழவைத்தாலும் அழியவிடாமல் காத்திருக்கும். நேர்மையற்று வாழ்ந்தவரின் பரம்பரையோ பேராசையால் கெட்டு அழிந்திருக்கும். )
=======================================================
   
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   -  115

தி.பொ.ச. உரை: சான்றோருக்கு அழகு சேர்க்கும் உண்மையான அணிகலன் அவரது நேர்மையான நெஞ்சம் மட்டுமே; ஏனென்றால் அவரது பிற அணிகலன்களுக்குத் தேய்வும் வளர்ச்சியும் இல்லாமல் இல்லை. ( இதன்மூலம் நேர்மையானவர்கள் ஈட்டிய பொருள் தேயலாம்; பெருகலாம். ஆனால் அவர்கள் ஈட்டிய நற்பெயர் ஒருநாளும் மாறுவதில்லை என்கிறார். )
======================================================
 
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.  -  116

தி.பொ.ச. உரை: நேர்மையற்ற செயலைச் செய்ய நெஞ்சம் விழையும்போது இதனால் தனக்குக் கேடு வரும் என்று அந் நெஞ்சத்திற்கு அறிவுறுத்துங்கள். ( இதனான் தவறான வழியில் பொருள் சேர்க்க ஆசை உண்டாகும் போது அதனால் வரும் துன்பத்தினை நினைத்துப் பார்க்க அந்த ஆசை மறையுமென்றார். )
======================================================
   
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.  - 117

தி.பொ.ச. உரை: நேர்மையான முறையில் நல்லதை மட்டுமே செய்கின்ற ஒருவரின் எளிமையான வாழ்வினைக் கண்டு ' அவர் வறுமையுற்றார் ' என்று உலகம் இகழாது. ( பொதுவாக நேர்மையானவர்கள் வாழ்க்கையில் அதிகப் பொருள் சேர்க்க இயலாது. இதனால் அவர்கள் எளிமையாகவே வாழ்வர். இதை வறுமை நிலை என்று இகழாமல் உயர்ந்த நிலையாகவே உலகம் போற்றும் என்கிறார். காரணம், இந்த எளிய வாழ்க்கை முறை தான் அவர்கள் நேர்மையானவராய் வாழ உதவி செய்கிறது. நெஞ்சத்தில் ஆடம்பரம் தலைதூக்கிவிட்டால் நேர்மையாக வாழ்வது கேள்விக்குறி ஆகிவிடுமன்றோ!. தாழ்வு = அடக்கம், பணிவு, எளிமை. கெடு = வறுமை. அகராதி காண்க. )
=======================================================

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.  -  118

தி.பொ.ச. உரை: ஒருபொருளின் நிறைகாணும் பொழுது சமநிலையில் இருக்கவல்ல பண்பே ஒரு துலாக்கோலுக்குப் பெருமை தருகிறது. அதைப்போல ஒரு சான்றோரின் நிறைகாணும் பொழுது அவரது நேர்மையாய் இருக்கவல்ல பண்பே அவருக்குப் பெருமையைத் தருகிறது.
=======================================================
   
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.  - 119

தி.பொ.ச. உரை: மாறுபாடற்ற சொற்களே ஒருவரது நேர்மையைக் காட்டிவிடும். ஏனென்றால் அவரது நேர்மையான நெஞ்சத்தின் வெளிப்பாடே அவை. ( அதாவது ஒருவரின் உள்ளத்தில் நேர்மை இல்லாவிட்டால் அது அவரது சொல்லின் மூலம் கண்டிப்பாக வெளிப்பட்டு விடும் என்கிறார். இதை வைத்து அவரது நம்பகத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார். கோட்டம் = மாறுபாடு, விலகல். )
=====================================================
   
வாணிகம் செய்வார்க்கு வாணிகன் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.  - 120

தி.பொ.ச. உரை: பொருள் வாங்குவோர்க்குத் துலாக்கோலால் எடைபோட்டுக் கொடுப்பதில் மட்டுமே நேர்மை என்றில்லாமல் (அப் பொருளுடன் தொடர்புடைய) பிறவற்றிலும் நேர்மையினையே கடைப்பிடிக்க வேண்டும். ( இங்கு பொருளுடன் தொடர்புடைய பிற என்பது பொருளின் தரம், பொருளின் விலை போன்றவையாம். சரியாக எடைபோட்டுக் கொடுத்தால் மட்டும் நேர்மை ஆகாது; ஆளைப்பார்த்து விலை சொல்வதும், பொருளின் தரத்தை மாற்றுவதும் நேர்மையான செயலன்று என்கிறார். வாணிகம் = வியாபாரம். வாணிகன் = துலாக்கோல். வாணிகன் பேணுதல் = துலாக்கோலை சரியாக நிறுத்தல். அகராதி காண்க. )
===================== வாழ்க தமிழ்! ===================== 

4 comments:

  1. 111: 'தாமரை இலை மேல் தண்ணீர்' நல்ல உவமை. தராசு நல்ல சித்திர உவமை.

    112. தி.ஜ.ர. அவர்கள் பொருட்டு இது பொய்த்து விட்டதே! எனினும் நேர்மை அத்யாவசியம்.

    113. இது முற்றிலும் உண்மை, கலி காலத்திலும்.

    114. கலி காலத்தில் இது பெரும்பாலும் பொய்த்து விட்டது.

    115. இது வைர வரி.

    116. நாடாளுமன்றம்/சட்டசபைகளில் இதை கல்வெட்டாக செதுக்கவேண்டும்.

    117. அண்ணல் காந்தி இவ்வாறு வாழ்ந்து காட்டினார்.

    118. இதை அன்றாடம் காண்கிறோம்.

    119. உண்மை. உண்மை. உண்மை.

    120. இவ்வாறு நடந்து விட்டால், நாட்டுக்க்கு சுபிக்ஷம் உத்தரவாதம்.

    கருத்தைக் கேட்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி இ ஐயா.

      அன்புடன்

      தி.பொ.ச.

      Delete
  2. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும். - 114

    தி.பொ.ச. உரை: ஒருவர் நேர்மையானவராய் வாழ்ந்தாரா இல்லையா என்பதை அவரது பரம்பரையினரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ( ஆம், குறள் 112 ல் கூறியபடி, நேர்மையோடு ஒருவர் வாழ்ந்திருந்தால் அது அவரது பரம்பரையை எளிமையாக வாழவைத்தாலும் அழியவிடாமல் காத்திருக்கும். நேர்மையற்று வாழ்ந்தவரின் பரம்பரையோ பேராசையால் கெட்டு அழிந்திருக்கும். )

    Avaravar Vinaiku avaravere poruppu endra siava sidhanthntha karuthukku ethirmarai yay Ullathe

    ReplyDelete
    Replies
    1. ஐயா, நேர்மையாக வாழ்ந்தவரின் பிள்ளைகளும் நேர்மையாக வாழ்வது தானே இயற்கை. இப்படி பரம்பரை பரம்பரையாக நேர்மையைக் கடைப்பிடித்து பேராசையின்றி வாழ்ந்து வரும்போது அந்த நேர்மை அவர்களை அழிவில் இருந்து காப்பாற்றும் தானே. இதைத் தான் வள்ளுவர் கூறுகிறார்.

      அன்புடன்,

      தி.பொ.ச.

      Delete

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.