Saturday, October 26, 2013

பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.   -  141

தி.பொ.ச. உரை: அறம் என்பதன் மெய்ப்பொருளைத் தெளிவாகக் கண்ட அறிஞர்களிடத்து பிறரது உடைமையாளாகிய மனைவியை விரும்புகின்ற அறிவின்மை இல்லை. ( பிறரது மனைவியை நேசிக்கும் செயலை அறத்தின் நீங்கிய செயல் என்றார்.  )
====================================================
   
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.  -  142

தி.பொ.ச. உரை: பிறர் மனைவியை நேசிப்பவர்கள் (சாதாரண முட்டாள்கள் அல்லர்) அறிவின் கடைக்கோடியில் இருக்கும் அறிவிலிகளைக் காட்டிலும் மிகப் பெரிய முட்டாள்கள் ஆவர். ( இங்கு அறன் = ஞானம், அறிவு. அகராதி காண்க. பிறர் மனைவியை நேசிப்பதுதான் இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் என்கிறார். )
=====================================================
   
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்.   -  143

தி.பொ.ச. உரை: தன்னை மிகவும் நம்பியவரின் மனைவியை விரும்பி அவருக்குத் தீமை புரிகின்றவனை பிணத்திற்கு ஒப்பானவனாகவே கருதவேண்டும். ( ஏனென்றால் மாந்தர்க்கு மானமே உயிராம்; மானங்கெட்ட இச் செயலைச் செய்பவன் உயிரோடிருந்தாலும் பிணத்திற்கு ஒப்பானவனே அன்றோ!. )
=====================================================
   
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.  - 144

தி.பொ.ச. உரை: தினையளவு கூட யோசிக்காமல் பிறர் மனைவியை விரும்புவனிடத்தில் மலையளவு பொருட்களும் பெருமைகளும் இருந்தாலும் அவை அத்தனையும் அழியும். ( இதனான் அறிவாலும் செல்வத்தாலும் பலத்தாலும் புகழ் மிக்கோரும் கூட பிறர் மனைவி மேல் காதல் கொள்ளத் துவங்கினால் தம் பெருமை அனைத்தையும் இழப்பர் என்கிறார். )
=====================================================
   
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.  - 145

தி.பொ.ச. உரை: பிறர் மனைவியை விரும்பி அவரை அடைவது எளிய செயலாகவே ஒருவர்க்குத் தோன்றினாலும் அதனால் அவர்க்கு உண்டாகும் கேட்டிலிருந்து மீள்வதென்பது முடியாத செயலாகும்.  ( இதிலிருந்து எந்த ஒரு தவறையும் செய்வது எளிது என்பதும் தவறுக்கான தண்டனையில் இருந்து தப்புவதோ கடினமான செயல் என்பதும் பெற்றியாம். )
======================================================
   
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். -  146

தி.பொ.ச. உரை: பிறர் மனைவிமேல் விருப்பம் கொண்டு சேர்பவனுக்கு அவன் விரும்பாமலே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் அவனிடத்து வந்து சேரும். ( இங்கு பகை என்பது அவளது கணவன் மற்றும் அவன் சுற்றத்தாரின் பகை. பாவம் என்பது அறம் நீங்கியதால் வரும் பயன். அச்சம் என்பது பகையினால் வருவது. பழி என்பது பாவத்தினால் வருவது. )
====================================================
   
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.  - 147

தி.பொ.ச. உரை: பிறன் மனைவி மேல் விருப்பம் கொள்ளாமல் தன் மனைவியை மட்டுமே நயந்து வாழ்க்கை நடத்துபவனே அற வழியில் வாழ்பவனாகிறான். ( இல்லறமல்லது நல்லறமில்லை என்பது ஆன்றோர் வாக்கானாலும் இல்லறத்தில் இருந்துகொண்டே பிறன்மனை நோக்கினால் அந்த இல்லறம் நல்லறம் அல்ல என்கிறார். )
====================================================
   
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.  -  148

தி.பொ.ச. உரை: பேராண்மை என்பது யாதெனின் அது பிறர் மனைவியை விரும்பாத பண்பேயாகும். அதுவே சான்றோருக்குப் பெருமை சேர்க்கின்ற அற ஒழுக்கமாகும். ( ஒரு பெண்ணை ஆளுவதையே ஆண்மை என்றும் பல பெண்களை ஆளுவதே பேராண்மை என்றும் தவறாகப் பொருள் கொண்டோர் பலர் உள்ளனர். அவர்கள் இக் குறளை முதலில் படித்து திருந்துவராக. )
===================================================
   
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.  - 149

தி.பொ.ச. உரை: கடல்நீர் சூழ்ந்த இவ் உலகில் அனைத்து நன்மைகளையும் பெறுவதற்குத் தகுதியானவர் யாரென்றால் அவர் பிறரது மனைவியின் மையுண்ட கண்களை காம விருப்பத்துடன் நோக்காதவரே ஆவார். ( இங்கு நாமநீர் வைப்பு என்பதின் மூலம் கடல்நீர் சூழ்ந்த இவ் உலகத்தையும் பெண்ணின் மையுண்ட கண்களையும் ஒருங்கே குறித்தார் என்க. தோள் என்பது கண்ணையும் தோள்தோய்தல் என்பது கண்ணோடு கண் பார்த்தலையும் குறிக்கும். தோள் என்றால் என்ன? ஆய்வுக் கட்டுரை காண்க.)
=====================================================
   
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   -  150

தி.பொ.ச. உரை: அறநெறியினின்று விலகி பிற மக்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் பிறன் மனைவியை விரும்பாதிருப்பது நன்றே.  ( காரணம், பிறன்மனை நோக்குவதால் விளையும் கேட்டில் இருந்து மீள முடியாது என்பதால். இதனான் பிறன் மனை நோக்குதல் பெரும்பாவம் என்பது வலியுறுத்தப்பட்டது. )
===================== வாழ்க தமிழ் ! =================
   

No comments:

Post a Comment

இங்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை தமிழில் அச்சடித்து வெளியிடலாம்.